அற்புத நிகழ்வுகள்!

எண்ணத்தில் மட்டுமல்ல, எண்களிலும் நிலைத்தவர்!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 எண்ணத்தில் மட்டுமல்ல, எண்களிலும் நிலைத்தவர்!

முன்னுரை

எண்ணத்தில் மட்டுமல்ல, எண்களிலும் நிலைத்தவர்!

இரண்டு பதிவு எண்களுமே வாகனமாய் வீட்டின் முன்…

               ஒரு நாள் இரண்டு சக்கர வாகனம் வாங்குவதற்காக எந்த நிறம் தனக்கு சிறந்தது? எந்த எண்களைக் கொண்டு வாகனத்தை பதிவிடலாம்? என்ற கேள்விக்காக தனது ஜோதிட நண்பரிடம் நாடி இருக்கிறார் திரு விஜய் அவர்கள்.

               இந்த கேள்விகளுக்கு திரு.சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள், காலம் அறிந்து தகுந்த நிறத்தை தன் ஆக்கினையின் முழு ஒப்புதலோடு, இரண்டு எண்களை கூறி அதாவது “1569 நம்பர் கெடச்சதுன்னா ரொம்ப விசேஷம்; இல்லன்னு சொல்லிட்டா! 1689 வாங்கிடுய்யா” என்கிறார். இரண்டு வினாடி கழித்து "1569 வீட்டுக்கு வந்துரும்ய்யா.... பாத்துக்கலாம்...." என்று முடிக்கிறார்.

“என்ன வரம் வேண்டும்” என்று கடவுள் கேட்டவுடன், அவ்வையார் பிராட்டி “பிறவாமை வரம் வேண்டும்” என்றதும், "இல்லையெனில்" என்கிறார் கடவுள்; “அப்படியென்றால் உன்னை மறவாமல் இருக்கும் வரம் வேண்டும்” என்று உடனுக்குடன் விண்ணப்பித்தது போல; தன் தேவையினை தெளிவாக வாகன பதிவுத்துறைக்கு விஜய் அவர்கள் எடுத்துச் சொல்ல, சென்ற நேரம் வாகன பதிவு ஓட்டம், எண் “1600”ஐ தாண்டியதையொட்டி இரண்டாவதாக பரிந்துரைக்கப்பட்ட “1689” என்கிற எண்ணினை தன் வாகனத்திற்காக வசப்படுத்தினாராம்.

இரண்டில் ஒன்றை கைப்பற்றி விட்ட மகிழ்ச்சியோடு வண்டிக்கு பூஜை போட்டுவிட்டு, தனது ஜோதிட நண்பருக்கு, தான் அவரது வீட்டிற்கு வருவதை கைபேசிமூலம் தெரிவித்துவிட்டு கிளம்புகிறார்.

மாலை 5:30 மணி அளவில் விஜய் அவர்கள் ஜோதிட நண்பரின் வீட்டின் வெளிப்புற கதவினை திறக்க, வீட்டின் அடித்தளத்தில் வசிக்கும் திரு.சி. பொதுவுடைமூர்த்தி அவர்களின் மாமியார் "வாப்பா என்ன புது வண்டியா!! பேஷ்" என்று பாராட்ட தன் நண்பரை பார்க்க முதல் தளத்திற்கு படியேறினார். சத்தம் கேட்டு வாசல் வெளியே வந்த ஐயா அவர்கள், வாசலில் நுழையும் பொழுதே தான் சிபாரிசு செய்த நிறத்தை கொண்ட புதிய வாகனத்தை எட்டிப்பார்த்து, வாழ்த்துக்களை தன் நண்பனின் கரம் இணைத்து, வெண்முத்தாய் சிரித்து, தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள; நாற்காலியின் மேல் சதுரத்தட்டில் பொட்டுக்கடலை மிகுதியாக இருந்த மிக்சரும், ரோஜா இதழ் கரைந்த பசும் பாலும் அந்த மாலைப் பொழுதின் சுவையை கூட்டியதாம். 

முதலாவதாக பரிந்துரைக்கப்பட்ட எண், கை சேராமல் போன காரணத்தைப் பற்றி விஜய் அவர்கள் விவரிக்கும் மத்தியில், திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள் "என்ன பன்றது!! 1569 கெடச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்.... சரி பரவால விடு!" என்கிறார்.

 

விஜய் அவர்கள் "சரி கீழ வண்டிய பார்க்கப் போலாம்... வாரும்!" என்று வரவேற்க இருவரும் கீழே செல்கின்றனர்.

ஸ்நேகிதர்கள் இருவரும் படியிறங்கி, வாசற் கதவின் வெளியே காலடி எடுத்து வைக்கும் அந்தி சாயும் மெல்லிய வெளிச்சத்தில், விஜய் அவர்கள் பரவசப்பட தனது ஜோதிட நண்பர் முதலாவதாக பரிந்துரைத்த “1569” என்கிற எண்களைக் கொண்ட மற்றுமோர் புத்தம் புது சிவப்பு நிற இரு சக்கர வாகனம் புன்முறுவல் செய்து கொண்டிருந்ததாம்.

“அட இது என்னய்யா!! இது எங்க இருந்து வந்துச்சு” என்று திரு. சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள் ஆர்வத்துடன் கேட்க, கீழ் தளத்தில் சற்றே உள்நுழைந்த தன் மாமனார் உள்ளேயிருந்து “அது என்னோட வண்டி தான் மாப்ள! இன்னைக்கு தான் வாங்கிட்டு வந்து, பூஜை போட்டுட்டு வரேன்” என்றிருக்கிறார்.

"1569 வீட்டுக்கு வந்துரும்ய்யா.... பாத்துக்கலாம்...."

என்ற தனது நண்பரின் வாக்கின் சக்தியை நினைத்து மெய் சிலிர்த்ததாம் இவருக்கு!!!

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்